ஆண்டாளின்மேல் இயற்றப்பட்ட திவ்யசரித்திரங்கள் அவள் பிறப்பையும் வீடுபேற்றையும் குறித்து என்ன கூறுகின்றன என்று பார்ப்போம். வெகுநாட்களாகத் தமக்குக் குழந்தை பிறவாமையை எண்ணி வருந்திய பெரியாழ்வார், அப்பேற்றை வேண்டி திருமாலிடம் முறையிட்டார். பிறகு, அவருடைய நந்தவனத்தில் ஒரு திருத்துழாய்ச் செடியண்டை ஒரு பெண்குழந்தை கிட்டினாள். ஆழ்வார் அவளை சுவீகரித்து, கோதை என்று பெயர்சூட்டி, அன்புடன் வளர்த்துவந்தார். தன் தந்தையைப்போலவே ஆண்டாள் என்று பின்பு புகழ்பெறவிருந்த கோதை திருமாலின்பால் மிகுந்த பிரேமையுடன் வளரலானாள். மணந்தால் திருமாலையன்றி வேறு யாரையும் மணவேன் என்று உறுதி பூண்டாள். அவளது காதலைக் கண்டு மெச்சிய திருமால், பெரியாழ்வாருடைய கனவிலும் பாண்டிய மன்னனுடைய கனவிலும் தோன்றி ஆண்டாளை முத்துச்சிவிகையில் திருவரங்கத்திற்குக் கொண்டுவருமாறு பணித்தார். அவ்வண்ணமே அரங்கத்திற்கு அழைத்துவரப்பட்ட ஆண்டாளை அப்பெரியகோயில்வாழ் உற்சவ (உத்ஸவ) மூர்த்தி அங்கேயே மணந்துகொண்டு தம்முடன் சேர்த்துக்கொண்டதாக வைணவ குருபரம்பரைவந்த திவ்யசரித்திரங்கள் கூறுகின்றன.
இந்த சரித்திரங்கள் ஆண்டாளும் பெரியாழ்வாரும் வாழ்ந்த காலத்திற்கு குறைந்த பட்சம் இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இயற்றப்பட்டவை என்று கூறப்படுகிறது. நவீன வரலாற்றாசிரியர்களுக்கு இக்கதையை முழுமையாக ஏற்றுக்கொள்ளுதல் கடினமே. ஆகையால், வாதத்திற்காக இக்கதையை விலக்கிவைத்துவிட்டு ஆண்டாளைப்பற்றி நமக்கு உறுதியாகத் தெரிந்த தகவல்களைப் பார்ப்போம்.
ஓர் அடிப்படை வினாவிலிருந்து தொடங்குவோம். ஆண்டாள் என்று யாரேனும் இருந்தாரா? இதற்கு நாம் இரண்டு வகையான சான்றுகளைத் தேடுவோம்: ஒன்று, தொல்பொருட் சான்றுகள் (கல்வெட்டுகள், செப்பேடுகள் அடக்கமாக), இரண்டு, செய்யுட் சான்றுகள். துரதிருஷ்டவசமாக, முதல்வகைச் சான்றுகள் மிகச்சொற்பமே. ஆனால், இரண்டாம் வகைச் சான்றுகள் ஏராளம். தமிழ் பக்தி இலக்கியத்தில், ஒரு பாமாலையின் (பாசுரத் தொகுப்பின்) இறுதியில், பலசுருதி (பலஶ்ருதி) எனும் கவிதை காணப்படுகிறது. அப்பாமாலையைக் ஓதுவதனால் விளையக்கூடிய நன்மைகளை அதன் கவிஞர் கூறும் பாசுரமே பலசுருதி ஆகும். இப்பாடலில், பாடல்களை இயற்றியவரின் பெயர், இடம், பெற்றோர் பெயர், பூர்வீகம், அப்பாமாலையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல குறிப்புகளைக் காணலாம். இவற்றை நாம் சங்க இலக்கியத்தில் காணோம். சொல்லப்போனால், படலாசிரியர் பெயரை, அப்பாடல்களைத் தொகுத்தவரிகள் விட்டுச்சென்ற அணிந்துரையிலிருந்துதான் நாம் அறிகிறோம். பக்தி இலக்கியத்தைப் பொறுத்தவரையில் (குறிப்பாக, ஆண்டாள், பெரியாழ்வார் பாடல்களைப் பொறுத்தவரையில்) யார் பாடலாசிரியர் என்பதை பலசுருதியின் மூலமாகத் திண்ணமாகச் சொல்லலாம்.
ஆண்டாள், திருப்பாயையின் முடிவில் ஒன்றும், நாச்சியார் திருமொழியின் பதினான்கு பதிகங்கள் இறுதியில் தலா ஒன்றுமாக, மொத்தம் பதினைந்து பலசுருதிகளை இயற்றியிருக்கிறார். இரு பாடல்கள் நீங்கலாக இவையனைத்திலும் தம் தந்தையை ஆண்டாள் குறிப்பிடுகிறார். அவரை விட்டுசித்தன் என்றோ பட்டர்பிரான் என்றோ அழைக்கிறார். விட்டுசித்தன் என்பது பெரியாழ்வாரின் இயற்பெயரும், அவர் தமது பலசுருதிகளில் தம்மை குறிப்பிடப் பயன்படுத்தும் பெயருமாகம். சில பலசுருதிகளில் அவர் தம்மைப் பட்டன் என்றும் அழைத்துக்கொள்கிறார். இச்சொல்லின் பொருள் அந்தணன், அல்லது கோயில் பூசாரி என்பதாகும். ஆண்டாள், விட்டுசித்தன் வில்லிபுத்தூர் (அல்லது புதுவை) எனும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் பன்முறைச் சொல்கிறார். உதாரணமாக, கீழ்வரும் பாடலின் இரண்டாம் அடியைக் காண்க:
அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக் கணிவிளக்கை
வில்லி புதுவைநகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே.
தமது தந்தை குறிப்பிடப்படாத அவ்விரு பாடல்களிலும் தம்மைக் கோதையென்றும் வில்லிபுத்தூர் கோதையென்றும் அழைக்கிறார். இரு பாடல்களைத் தவிர பிற பலசுருதிகள் அனைத்திலும் தம்மை கோதையென்றே கூறிக்கொள்கிறார். விஞ்சிய இரு பாடல்களிலும் அவர் தம் தந்தையின் திருநாமத்தை மறவாது குறிப்பிடுகிறார்.
இது சிலவற்றைத் தெளிவுபடுத்துகிறது. கோதை என்று ஒருத்தி இருந்தது உண்மை. அவள் விட்டுசித்தனையே தன் தந்தையாகக் கருதினாள். இப்பொழுது விட்டுசித்தன் என்ற பெரியாழ்வாரின் பாடல்களை ஆராய்வோம். முன்பே கூறியதுபோல் தமது பற்பல பலசுருதிகளில் தம்மை விட்டுசித்தன் என்றோ பட்டன் என்றோ மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டார். இதுவரை இருவரின் பாடல்களிலும் எவ்வித முரண்மையையும் நாம் காணோம். ஒரு பாடலில் பெரியாழ்வார் கூறுகிறார்:
ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண்டு கந்து மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ!
“என் ஒரே மகளை மகாலக்ஷ்மியைப் போல் வளர்த்தேன். திருமால் அவளைக் கொண்டுபோய்விட்டான். பெரியவீட்டுப் பெண்ணான யசோதை தன் மருமகளை எப்படி நடத்துவாளோ” என்று இப்பாடலுக்குப் பொருள் கூறலாம். இதை இருவிதமாக ஆராயலாம். சுயசரிதையாகவும், அணியலங்காரமாகவும்.
இப்பாடல், ஆண்டாளின் பாடல்களில் செறிந்துள்ள பொருளோடும், செங்கண்மாலின்பால் அவள் கொண்ட பிரேமையோடும் நன்கு பொருந்துவதால், இப்பாடலை ஆழ்வாரின் சுயசரிதையாகக் கொள்வது மிக எளிது. ஆனால், சற்றே விலகி, இப்பாடல் இடம்பெற்றுள்ள பதிகத்தில் ஒன்றாக பாடலை நோக்கும்பொழுது, காட்சி மாறுகிறது. அக்காட்சியை புரிந்துகொள்ள, பெரியாழ்வாரின் பக்தியை புரிந்துகொள்ளவேண்டும். அவரது பல பாசுரங்கள், ஒரு தாயின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவையே அன்றி ஒரு தந்தையாக எழுதப்பட்டவையல்ல. பாரதியின் கண்ணன் பாட்டு பரிச்சயம் உள்ளவர்கட்கு இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
பெரியாழ்வார் தமது பாசுரங்களில் கண்ணனின் பிறப்பையும் குழந்தைப் பருவத்தையும் பற்றி அழகு ததும்ப விவரிக்கிறார். இப்பாடல்கள் பலவற்றிலும் தம்மை யசோதையாகவே பாவித்துக்கொள்கிறார். தவிர, கண்ணனை அவனைச் சுற்றியிருந்த பலரின் கண்ணோட்டத்திலும் பல பாடல்களைப் பாடுகிறார், பாரதி கண்ணனை தனது மகனாகவும், காதலனாகவும், சேவகனாகவும் சத்குருவாகவும் பாடியதைப்போல. மேற்கூறிய பாடல் இடம்பெற்றுள்ள பதிகத்தில் ஆழ்வார், தன் செல்லமகளை மாயக்கண்ணனுக்குப் பறிகொடுத்த ஓர் அன்னையின் சோகக் குரலில் பாடுகிறார். இப்பாடலுக்கு அடுத்த பாடலை வாசித்தால் இது தெளிவாகிறது:
தம்மாமன் நந்தகோ பாலன் தழீஇக்கொண்டு என்மகள் தன்னை
செம்மாந் திரேயென்று சொல்லிச் செழுங்கயற் கண்ணும்செவ் வாயும்
கொம்மை முலையும் இடையும் கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
இம்மக ளைப்பெற்ற தாயர் இனித்தரி யாரென்னுங் கொலோ.
“இவ்வளவு அழகான பெண்ணை பிரிந்து அவள் தாய் இன்னும் உயிரோடிருப்பாளா?” என்று கண்ணனின் அப்பா நந்தகோபன் ஆச்சாரியப்படுவாரன்றோ என்று பெண்ணைப்பெற்ற தாய் அங்கலாய்ப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. இன்னும் ஏதேனும் ஐயம் இருக்குமாயின், இப்பாடல் இடம்பெற்றுள்ள பதிகத்தின் தலைப்பு அதை நீக்குகிறது. அதாகப்பட்டது: “தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி ஏங்குதல்”. இங்கு திருமாலைத் தலைவன் என்றழைக்கும் மரபை நோக்குக. இவ்வாறு தலைவனால் கொண்டு செல்லப்பட்ட மகளைப் பிரிந்து வருந்தும் தாய் எனும் பாடற்கரு கொண்ட பாடல்கள் பாலைத்திணையைச் சார்ந்தவை என்பதை, சங்க இலக்கியம் பற்றிய அறிமுகம் இருப்பவர்கள் எளிதில் உணரலாம். இதை மேற்கோள் காட்டி விளக்கவேண்டுமாயின் ஐங்குறுநூறு எனும் சங்கநூலில் வரும் கீழ்கண்ட பாலைத்திணைப் பாடலைக் காண்க:
நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்றஎன் மகளே
பந்தும் பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே.
ஆகையால், பெரியாழ்வார் தம் பாடல் வாயிலாகத் தமது வாழ்க்கையில் நடந்ததைத்தான் கூறுகிறார் என்னும் கருத்தே உண்மையாக இருக்கும் சாத்தியக்கூறு இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் குறைவு என்றே தோன்றுகிறது.
சரி, நாம் இலக்கிய அகச்சான்றுகளை ஆராய்ந்ததன் மூலம் நாம் அறிந்தது யாது?
- ஐயமற, ஆண்டாள் பெரியாழ்வாரின் புதல்வி என்பதும், ஐயமற, பெரியாழவார் ஓரந்தணர் என்பதும் புலனாகின்றன.
- திருமால் ஆண்டாளைக் கொண்டுபோனதற்கான அகச்சான்றுகளும் குறைவாகவே காணப்படுகின்றன (இக்கருத்து தவறாயின், திருத்திக்கொள்ள அணியமாயிருக்கிறேன்)
முதற்கூறிய திவ்யசரித்திரங்களை மீண்டும் பாப்போம். திவ்யசரித்திரங்களில் அற்புதங்கள் இடம்பெறுவது இயல்பே. பெரியாழ்வார் மற்றும் ஆண்டாளின் அருளிச்செயலை (பாடல்களுக்கான தீந்தமிழ்ச் சொல்) ஒரு பக்தனாக வாசித்தால் (பெரும்பாலும் அதே என் கண்ணோட்டம்) ஆண்டாளை இறைவியென்று கொளல் மிகவும் சுலபம். இதை ஏற்றுக்கொண்டால் ஆண்டாள் ஒரு மானிடனுக்கு மகளாய்ப் பிறந்திருக்கக்கூடும் என்றெண்ணுதல் துர்லபமாகிறது. இறையம்சமுள்ள பெண்குழந்தையை பூமியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தல் எனும் வார்ப்பச்சு இராமாயணத்தில் காண்கிறோம். சீதை ஜனகமாமன்னனுக்குக் கிடைத்த சரித்திரமும் கோதை விட்டுசித்தனுக்குக் கிட்டிய வரலாறும் ஓத்திருப்பதையும் காண்கிறோம். எனவே, ஆண்டாளின் அவதார இரகசியத்துக்கு ஓர் எளிமையான விளக்கத்தை நாடினோமேயானால், அது ஆண்டாள் பெரியாழவாரின் சொந்த மகள் என்பதே ஆகும். உள்ள எல்லா கருத்துகளிலும் இவ்விளக்கத்திலேயே அனுமானங்கள் குறைவு. எனவே, ஓஃகம்’ஸ் ரேசர் (Ockam’s Razor) விதிப்படி இதுவே சரியான விளக்கமாக இருக்க வேண்டும்.
இப்பொழுது, கவிஞர் வைரமுத்து முன்வைக்கும் கருத்தை மறுபரிசீலனை செய்வோம். அது, ஆண்டாள் பெரியாழ்வாருக்குப் பிறந்த மகள் அல்லள் என்ற திவ்யசரித்திரங்களின் கதையை அவ்வாறே ஏற்கிறது. ஆனால், அதே சரித்திரங்கள் ஆண்டாள் இறையோடு இணைந்தாள் என்று கூறுவதை மறுக்கிறது. அல்லது, அச்சேர்க்கைக்கு வியாக்கியானமாக “ஆண்டாள் திருவரங்கம் பெருமாளின் சேவகியானாள். அல்லது தேவதாசி ஆனாள்” என்று பொருளுரைக்கிறது. சான்றாக, ஆண்டாளின் காமரசம் கொண்ட பாடல்களையும், அதையொத்த சங்கப்பாடலையும் (குறுந்தொகை 27) வைரமுத்து ஒப்பிட்டு வேறுபடுத்துகிறார். குறுந்தொகை 27ஆம் பாடலை இயற்றிய வெள்ளிவீதியார் திருமணமான பெண் என்றும் ஆண்டாள் திருமணம் அகாதவள் என்றும், ஆதலால், ஒரு கன்னிப்பெண் இத்தகு பாடல்களைப் புனையும் விடுதலையைப் பெற்றிருந்தார் என்றால் அவர் தேவதாசியாகவே இருந்திருக்க வேண்டும் என்றும் ஒரு விளக்கத்தை முன்வைக்கிறார் கவிஞர். இந்த வாதம் அவ்வளவு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. மாறாக, இந்த வாதம், சங்க இலக்கியத்தில் மண்டியிருக்கும் மணமான/மணமாகாத விடுதலைப் பெண்களைப்பற்றிய களவொழுக்கப் பாடல்களுக்கு முரணாகத் திகழ்வதைக் காண்கிறோம்.
தவிர, இந்த வாதம், ஒரு கதையில் நம் அரசியலையும் நம்பிக்கைகளையும் திருப்திப்படுத்தும் அம்சங்களை மட்டும் கொண்டு புனையப்பட்டதாத் தோன்றுகிறது. தத்துப்பெண் எனும் துணுக்கு நமது அரசியலை ஒத்திருப்பமையால் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், ஆண்டாள் திருமாலோடு ஒன்றாதல் நம் நம்பிக்கைக்கு எதிராக உள்ளமையால் அது திருத்தித் திரிக்கப்படுகிறது. அடிப்படையிலேயே இது ஒரு தவறான, சிக்கலான அணுகுமுறையாகும்.
திருப்பாணாழ்வார் பாதாதிகேசம் அரங்கனைப் பத்தே பாடல்களில் விவரித்துவிட்டுத் திருமாலுடன் இதே திருவரங்கத்தில் இணைந்ததாகவும் குருபரம்பரை கூறுகிறது. இதை எப்படிப் பகுத்தறிவோம்? அவர் ஓர் ஆண் தேவதாசியாக மாறினாரா? மாறாக, இந்த எடுத்துக்காட்டு ஒரு படி ஆழமாகச் சென்று வைரமுத்துவின் வாதத்தைப் பொய்ப்பிக்கிறது. திருப்பாணாழ்வார் எனும் ஆலயங்களும் அனுமதிக்கப்படாமலிருந்த பாணர் குலத்தவர் (இசைஞர். தேவதாசிகளின் முன்னோடிகளோ?) குருபரம்பரையில் எவ்வித மழுப்பல் சப்பைக்கட்டு இன்றி விவரிக்கப்பட்டிருந்தால், ஆண்டாள் ஒரு தேவதாசி என்பதை மட்டும் ஏன் பூசி மெழுகவேண்டும், அவள் தேவதாசியாய் இருப்பின்?
வைரமுத்து, அவமதிக்கவேண்டுமென்றே இவ்விதம் சொன்னார் என்று எனக்குத் தோன்றவில்லை. கோதையின் மூதாதையர்கள் யாராயிருப்பினும் ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்த கோதையின் புகழை அப்பாடல்களே என்றும் பறைசாற்றும். எவ்வாறாயினும் ஆண்டாளை தேவதாசியென்று எண்ணுவதால் அவளுக்கு எவ்விதக் களங்கமும் ஏற்பட்டுவிடாது. அதனால் மட்டும் அது உண்மையாகிவிடாது. அதற்குத் தேவை ஆதாரம். தற்பொழுது அது மிகச்சொற்பமாகவே இருக்கின்றபடியால், ஆண்டாள் ஒரு தேவதாசி என்ற வாதத்தை இலக்கியக் குப்பைத்தொட்டிக்கு இடம்பெயர்த்தல் அவசியமாகிறது.